சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.27 திருக்கற்குடி
பண் - நட்டராகம்
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
1
மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.
2
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.
3
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
4
சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
5
அலையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அலையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
6
பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.
7
நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே! அடியேனையும் அஞ்சலென்னே.
8
வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
9
அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com